மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முயற்சி போலீசார் மீட்டு விசாரணை


மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முயற்சி போலீசார் மீட்டு விசாரணை
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 7:31 PM GMT)

மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முயற்சி நடந்தது. தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பாடசாலை குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராதா (வயது 70). மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

பிறகு அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்று உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். பின்னர் நேற்று ராதாவின் உடலை தகனம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முயன்றனர்.

இந்த நிலையில் ராதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என்று மாமல்லபுரம் போலீசாருக்கு ஒருவர் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் பூஞ்சேரிக்கு விரைந்து சென்று ராதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில் மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story