விதை இல்லாத தானியங்களை இருப்பு வைத்தால் கடும் நடவடிக்கை; உற்பத்தியாளர்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் எச்சரிக்கை


விதை இல்லாத தானியங்களை இருப்பு வைத்தால் கடும் நடவடிக்கை; உற்பத்தியாளர்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 July 2019 9:45 PM GMT (Updated: 13 July 2019 7:58 PM GMT)

விதை இல்லாத தானியங்களை இருப்பு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உற்பத்தியாளர்களுக்கு விதைச் சான்று உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

போடிபட்டி,

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு உளுந்து, நெல், கரும்பு, மக்காச்சோளம், தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எந்தவொரு சாகுபடியும் நல்ல மகசூல் பெற வேண்டுமானால் அதற்கு தரமான விதைகள் அவசியமாகும்.

அந்த வகையில் தனியார், மற்றும் அரசு விதைப்பண்ணைகளில் விதைகளின் தரம் குறித்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விதைப்பண்ணைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வேடப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வம்பன் 8 ரக உளுந்து ஆதார நிலை இரண்டு விதைப்பண்ணையில் ஆய்வு செய்தார். அப்பொழுது வம்பன் 8 ரக உளுந்துக்கான குணாதிசயங்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கலவன் பயிர்களை கண்காணித்து உடனுக்குடன் அகற்றிட உதவி விதை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அத்துடன் 65 முதல் 70 நாட்கள் வரை வயதுடைய வம்பன் 8 ரக உளுந்துப்பயிர் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடையக்கூடியது. மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.ஏக்கருக்கு 700 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. எனவே இந்த ரக உளுந்துக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் வம்பன் 8 ரக ஆதார நிலை விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்து விதைப்பண்ணை அமைக்கலாம்.அதனை கடந்த ஒன்றாம் தேதி முதல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டு வரும் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

இதனை தொடர்ந்து பாப்பான்குளத்திலுள்ள அரசு விதைப்பண்ணை, துங்காவியிலுள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தார்.மேலும் வயல்மட்ட விதைகள்,சுத்திகரிக்கப்பட்ட விதைக்குவியல்கள் மற்றும் சான்று செய்யப்பட்ட விதைக்குவியல்களை ஆய்வு செய்து ரக வாரியாக விதைக்குவியல்களை இருப்பு வைக்க அறிவுரை வழங்கினார். அத்துடன் வரும் சம்பா பருவத்துக்குத் தேவையான நெல்விதைகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கினார்.

மேலும் வயல்மட்டப்பதிவேடு,சுத்திகரிப்பு நிலையப்பதிவேடு மற்றும் சான்றட்டை இருப்பு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.அத்துடன் சுத்திகரிப்பு நிலையங்களில் விதையில்லாத தானியங்களை இருப்பு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உடுமலை விதைச்சான்று அலுவலர் ஹேமலதா உடனிருந்தார்.

Next Story