குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இளையான்குடி-தாயமங்கலம் சாலையை செப்பனிட வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்


குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இளையான்குடி-தாயமங்கலம் சாலையை செப்பனிட வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 8:31 PM GMT)

குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இளையான்குடி-தாயமங்கலம் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ் போடப்பட்ட பல்வேறு சாலைகள் தற்பாது சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதில் முக்கியமான சாலை இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கோவிலுக்கு செல்லும் சாலையாகும். இந்த சாலை தாயமங்கலத்தில் இருந்து மேட்டுச்சாத்தமங்களம், முடவேலி, குண்டுகுளம், கொடியமங்கலம், நாகமுகுந்தன்குடி, ஆர்.கே.நகர், இட்டிசேரி வழியாக புதுக்குளம் வரை 4 கி.மீ. தூரம் உள்ளது.

இதேபோல் இளையான்குடி சாலை முதல் சவேரியார்புரம், விளஞ்சனி, பொன்னியேந்தல் சாலை மற்றும் இளையான்குடி சாலையில் இருந்து அரியமங்களம், மேலத்துறையூர், மணக்குடி சாலை, பொன்னியேந்தல், வண்ணாரவயல் சாலை உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். அவ்வாறு வருவோர்களில் பெரும்பாலானோர் கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். ஆனால் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

பள்ளங்களால் வாகனங்கள் பழுதாகி நிற்கும் நிலை உள்ளது. இதுதவிர மோட்டார் சைக்கிளில் வரும் சில வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து செல்வதால் காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை விரைந்து செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story