தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு: சேலம் உருக்காலை தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் போராட்டம்


தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு: சேலம் உருக்காலை தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 8:51 PM GMT)

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

இந்திய பொதுத்துறை நிறுவனமாக திகழும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும், இது தொடர்பான டெண்டரை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த வாரம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், சேலம் உருக்காலையில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணிக்கு உருக்காலையின் 2-வது நுழைவு வாசல் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது குடும்பத்தினருடன் திரண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., உருக்காலையின் தொ.மு.ச. பொதுச்செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர், உருக்காலை தொழிலாளர்களுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் உருக்காலையின் 3-வது நுழைவு வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உருக்காலையை தனியார் மயமாக்கல் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், உருக்காலைக்காக ஏற்கனவே நிலம் கொடுத்த விவசாயிகள், அதன் சங்க நிர்வாகி தங்கராஜ் தலைமையில் மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து உருக்காலை தனியார் மயமாக்கலை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்த போது, சேலத்தில் உருக்காலையை நிறுவினார். ஆனால் எப்போதெல்லாம் பா.ஜனதா ஆட்சி மத்தியில் வருகிறதோ? அப்போது எல்லாம் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க முயற்சிகள் நடக்கிறது. அதாவது, தனியாருக்கு விற்பனை செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் தனி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., பேசியுள்ளார். இதனால் ஒருபோதும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விட தி.மு.க. அனுமதிக்காது. சேலத்தில் நடக்கும் போராட்டத்தை போல் சென்னையிலும் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.

Next Story