கொட்டாம்பட்டி, அ.வல்லாளப்பட்டியில் நீர்நிலை மேம்பாட்டு பணிகள்; மத்திய குழுவினர் ஆய்வு


கொட்டாம்பட்டி, அ.வல்லாளப்பட்டியில் நீர்நிலை மேம்பாட்டு பணிகள்; மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 8:57 PM GMT)

கொட்டாம்பட்டி, அ.வல்லாளப்பட்டியில் நீர்நிலை மேம்பாட்டு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொட்டாம்பட்டி,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் மேலாண்மை திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் எங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது என்பதை கணக்கெடுப்பது, நீர்நிலைகளை புனரமைப்பது, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீர்நிலை மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஒவ்வொரு பகுதிகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி கொட்டாம்பட்டி பகுதியில் மத்திய நீர் மேலாண்மை குழு அதிகாரிகள் அணில்குமார், அட்சன் சதீஷ் கிலானி நேற்று ஆய்வு நடத்தினர். அவர்கள் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்த பகுதிகளான கொட்டாம்பட்டி, பூமங்களபட்டி, பொட்டப்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கூறினர். மேலும் அங்குள்ள வீடுகளுக்கு சென்று கழிவுநீர் சேமிப்பது குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தனர். ஆய்வின் போது ஒன்றிய ஆணையாளர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலவன், தொகுதி அலுவலர் அழகேசன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சியில் நீர் மேலாண்மை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சிக்கு சொந்தமான ஊருணிகள், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் மற்றும் நீர்நிலைகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்புகள் குறித்து மத்திய குழு அதிகாரிகள் ராதாராணி, அபிஷேக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், உதவி பொறியாளர்கள் சுரேஷ் குமார், சரசுவதி பிரியா, வள்ளிராஜம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story