பெங்களூரு ராஜாஜிநகரில் காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


பெங்களூரு ராஜாஜிநகரில் காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 9:40 PM GMT)

பெங்களூரு ராஜாஜிநகரில் காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு ராஜாஜிநகரில் காவிரி குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடிநீர் விநியோகம்

பெங்களூருவில் வீடுகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் காவிரியில் இருந்து எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் இன்னும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்கவில்லை. அதற்கான குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்-மந்திரி குமாரசாமி கடந்த பட்ஜெட்டில், பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள்(2020) குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் மழை பெய்யாததால் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் ஒரு லோடு(4 ஆயிரம் லிட்டர்) டேங்கர் தண்ணீர் ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் காவிரி குடிநீர் திட்ட பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் கட்டணம்

நகரின் பல பகுதிகளில் குடிநீர் இணைப்பு இருந்தும் சரியான முறையில் தண்ணீர் வருவது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் உள்ள 70-வது கிராஸ் பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது திடீரென நின்றுவிட்டது. அந்த வீடுகளுக்கு தண்ணீர் வருவது நின்று 3 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய ஆய்வாளர் நரசிம்மனிடம் புகார் கூறப்பட்டது. இதன் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பலமுறை அவரை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர், “வேறு இடத்தில் குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என கூறுகிறார்” என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள். 3 மாதங்களாக தண்ணீர் வராததால், அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் வராவிட்டாலும் 3 மாதங்களுக்குரிய தண்ணீர் கட்டணத்தை அந்த புகார்தாரர்கள் செலுத்தியுள்ளனர்.

சாலை துண்டிப்பு

இதுபற்றி மீண்டும் அந்த ஆய்வாளரிடம் கூறியபோது, பழைய குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிட்டதாகவும், நீங்கள் உரிய அனுமதி பெற்று வேறு குழாயில் இருந்து இணைப்பு பெற வேண்டும் என்றும், அதற்கு சாலை துண்டிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “சுமார் 30 முதல் 40 அடி தூரம் உள்ள குழாயில் இருந்து இணைப்பு பெற வேண்டியுள்ளதால், சாலை துண்டிப்பு கட்டணம் சுமார் ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். நாங்கள் குடிநீர் இணைப்பு பெற்று 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இப்போது மீண்டும் ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டும் என்று சொன்னால் அது எப்படி முடியும்” என்று கூறுகிறார்கள். பழைய குழாயில் தண்ணீர் விடுவதை நிறுத்தியது ஏன் என்றும், அந்த மக்கள் கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

Next Story