ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு


ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 14 July 2019 10:15 PM GMT (Updated: 14 July 2019 9:22 PM GMT)

ஏற்காட்டில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார்.

ஏற்காடு,

ஏற்காடு கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரும், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்த முகமது உசேன் மகள் கரிஸ்மாவும் (23) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஆஸ்வா என்று 2 வயதில் மகன் உள்ளான். செல்வகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கரிஸ்மாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும் இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

பெண் சாவு

இந்தநிலையில் நேற்று செல்வகுமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் கரிஸ்மா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கரிஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story