திண்டிவனம் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி


திண்டிவனம் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 15 July 2019 10:30 PM GMT (Updated: 15 July 2019 11:35 PM GMT)

திண்டிவனம் அருகே வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள டி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயசெல்வி(வயது 35). இவர் நேற்று காலை தனது வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டு வாசலில் உள்ள மின்கம்பத்தில் இருந்து நிலத்தில் நடப்பட்டிருந்த எர்த் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனை அறியாத ஜெயசெல்வி எதிர்பாராமல் எர்த் கம்பியை தொட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசெல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சத்தம்கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், உறவினர்கள் ஜெயசெல்வியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கியதில் பலியான ஜெயசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயசெல்விக்கு ஹரிகரன்(15), தமிழ்ச்செல்வி(9) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.


Next Story