ஒரத்தநாட்டில் தாய்-மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு பெயிண்டர் கைது


ஒரத்தநாட்டில் தாய்-மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 10:15 PM GMT (Updated: 17 July 2019 7:15 PM GMT)

ஒரத்தநாட்டில், தாய்-மகளை சரமாரியாக அரிவாளால் வெட்டிய பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கோர்ட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சேகர் இவரது மனைவி நாகம்மாள்(வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். சேகர் கடந்த சில ஆ்ண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து நாகம்மாளுக்கும், செம்மண்குட்டை பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராஜேந்திரன்(50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று அங்கு வீட்டு வேலை செய்து வந்த நாகம்மாள், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கிருந்து ஒரத்தநாட்டிற்கு திரும்பி வந்தார். இதன்பிறகு நாகம்மாளை, ராஜேந்திரன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது நாகம்மாள் இனிமேல் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்று ராஜேந்திரனிடம் கூறியுள்ளார். மேலும் அவரது மகள்களும் ராஜேந்திரனை கண்டித்ததாக தெரிகிறது.

போலீசில் புகார்

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் மீண்டும் நாகம்மாளை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு தரவேண்டிய பணத்தை உடனே தரவேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னையும், உனது மகள்களையும் கொலை செய்து விடுவேன் என்றும் ராஜேந்திரன் நாகம்மாளை மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த நாகம்மாளின் மகள் பழனியம்மாள்(27) நேற்று முன்தினம் காலை தனது தாயாருடன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்று ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் நாகம்மாளை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகம்மாள் தனது மற்றொரு மகள் பாரதியுடன்(14) ஒரத்தநாடு மன்னார்குடி சாலை பிரிவில் மதுபான கடை எதிரே உள்ள ஒரு பேன்ஸி ஸ்டோரில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகம்மாளை சரமாரியாக வெட்டினார். தனது தாய் வெட்டப்படுவதை பார்த்து பாரதி அதை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த நாகம்மாள் மற்றும் அவரது மகள் பாரதி ஆகிய இருவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெயிண்டர் கைது

இதற்கிடையே தாய் மற்றும் மகளை சரமாரியாக அரிவாளால் வெட்டிய ராஜேந்திரனை அருகில் இருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து ஒரத்தநாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகம்மாளின் மகள் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story