வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 17 July 2019 10:15 PM GMT (Updated: 17 July 2019 7:42 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை அண்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 38). இவர் அதே பகுதியில் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் பால் அளவையராக பணியாற்றி வந்தார். மணிகண்டனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை

இதேபோல் மற்றொரு சம்பவமாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் சேகர்(35). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த சேகர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

பெரம்பலூர் அருகே அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(60). இவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் கலியமூர்த்திக்கு வயிற்று வலி குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த கலியமூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலியமூர்த்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story