மண்டைக்காடு கோவிலில் குழந்தையிடம் தங்க வளையலை பறிக்க முயன்றவர் கைது


மண்டைக்காடு கோவிலில் குழந்தையிடம் தங்க வளையலை பறிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 10:15 PM GMT (Updated: 17 July 2019 8:19 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குழந்தையிடம் 1 பவுன் வளையலை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மணவாளக்குறிச்சி.

கருங்கல் பூட்டேற்றி ஒளிப்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி கமலபாய் (வயது 55). நேற்று முன்தினம் மாலை கமலபாய் தனது மகள் மற்றும் பேத்தி, உறவினர்களுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஆனி மாத கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கமலபாயின் பேத்தி கையில் அணிந்திருந்த 1 பவுன் வளையலை பறிக்க முயன்றார். இதை கண்ட பொதுமக்கள் மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவரை பொதுமக்கள் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொற்றையடி அருகே வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பதும், கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தையிடம் நகையை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Next Story