கடனை திருப்பி கேட்டதால் தகராறு வாலிபர் குத்திக்கொலை


கடனை திருப்பி கேட்டதால் தகராறு வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 17 July 2019 11:30 PM GMT (Updated: 17 July 2019 10:02 PM GMT)

கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பவானி நகர் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பஷீர்முகமது. இவருடைய மகன் ஒசாமா என்ற காதர்அலி (வயது 19). இவர்கள், பம்மல் நல்லதம்பி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

பஷீர்முகமதுவின் மகள் சித்திஷைனுரியா. இவர் கணவர் முகமது அலி என்ற நிஜாம் மொய்தீனுடன் பம்மல் அண்ணாநகர் நல்லதம்பி ரோட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.1½ லட்சத்தை மாமனார் வீட்டுக்கு முகமது அலி கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திரும்ப கேட்டபோது இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும், கடனை திருப்பி கேட்டது தொடர்பாக முகமது அலிக்கும், அவருடைய மைத்துனர் ஒசாமாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இருவரும் கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த ஒசாமா, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தில் காயம் அடைந்த முகமது அலி, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முகமது அலியை சிகிச்சை முடிந்த பிறகு கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story