ஸ்ரீமுஷ்ணம் அருகே துணிகரம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை


ஸ்ரீமுஷ்ணம் அருகே துணிகரம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 July 2019 10:45 PM GMT (Updated: 17 July 2019 11:32 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் செட்டித்தெருவை சேர்ந்தவர் தேவராஜூலு மகன் தனசேகரன் (வயது 63). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் போன் மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி மேகலை(51). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

இதேபோல் மகன் கிஷோர்குமாருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, சென்னையில் வசித்து வருகிறார். இதனால் ராமாபுரத்தில் தனசேகரன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் உறவினர்களுடன் கடந்த 12-ந்தேதி திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இதையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்கள். அப்போது அவர்களது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கிருந்த பீரோ கதவு திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. அதோடு பூஜை அறையில் இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்களும் மாயமாகி இருந்தன. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்து சென்றனர். கொள்ளை போன பணம் மற்றும் நகையின் மொத்த மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்.

இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story