சிதம்பரம், ராமநத்தம் அருகே நடந்த, தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு


சிதம்பரம், ராமநத்தம் அருகே நடந்த, தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 11:32 PM GMT)

சிதம்பரம் மற்றும் ராமநத்தம் அருகே நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

சிதம்பரம், 

சிதம்பரம் அம்மா பேட்டையை சேர்ந்தவர் நடராஜன்(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் மெயின்ரோட்டில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது துலுக்கான் கன்னி வாய்க்கால் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பெரியசாமி (56). இவர் நேற்று முன்தினம் இரவு இளமங்களம் கிராமத்திற்கு செல்வதற்காக எழுத்தூர் கை காட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றார். அவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story