பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து அரசு டாக்டர்கள் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து அரசு டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:48 PM GMT)

தகுதிக்கேற்ற ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம்,

தகுதிகேற்ற ஊதியம் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மட்டுமே அல்லாமல், நோயாளிகள் சேவைகேற்ப மருத்துவர்கள் பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 10-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து 12-ந் தேதி அரசு மருத்துவமனைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் உண்ணாவிரதம் நடந்தது. இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை 2 மணிநேரம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் டாக்டர் அருளஸ்வரன் தலைமை தாங்கி, மருத்துவமனை முன்பு காத்து இருந்த நோயாளிகளிடம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். சங்க செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனையிலும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

Next Story