பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 8:14 PM GMT)

கீழ்வேளூரில், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கீழ்வேளூர், ராதாமங்கலம், ஆந்தகுடி, வெண்மணி, மோகனூர், கூத்தூர், வெங்கிடங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை செலுத்தி இருந்தனர். மேற்கண்ட கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்காப்பீட்டு தொகை நேரடியாக செலுத்தியும், கடன் பெற்ற விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், விடுபட்ட பயனாளிகளுக்கு உடனே காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் (பொறுப்பு) அபுபக்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சாந்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story