நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் குத்தாலம், பூம்புகார் பகுதியில் நடந்தது


நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் குத்தாலம், பூம்புகார் பகுதியில் நடந்தது
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 8:19 PM GMT)

குத்தாலம், பூம்புகார் பகுதியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

குத்தாலம்,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி குத்தாலத்தில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் டேவிட் பிரேம்குமார், பொன்.பூங்குழலி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் வெள்ளாந்தெரு, மீனாங்குளம், தேரடி, மெயின்ரோடு, கடைவீதி, திருமணஞ்சேரி சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியப்படி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து ஊர்வலமாக சென்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை லதா நன்றி கூறினார்.

இதேபோல் பூம்புகார் அருகே மேலையூரில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடிநீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.

இதில் வட்டார கல்வி அலுவலர் லட்சுமி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அன்பழகன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப் பாளர் ரவி நன்றி கூறினார்.

Next Story