மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 8:35 PM GMT)

மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு உள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) குணபாலன், கொடுப்பக்குழி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மணிகண்டேஸ்வர குமாரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசிய போது தெரிவித்த கோரிக்கைகள், குறைகள் விவரம் வருமாறு:-

குமரி மாவட்டத்தில் பாசனத்துக்கான நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சரிவர விவசாய நிலங்களை சென்றடையவில்லை. இதற்கு முக்கிய காரணம் கால்வாய்கள் ஆக்கிரமிப்பும், தூர்வாரப்படாததே ஆகும். பெரும்பாலான குளங்களில் தண்ணீர் இல்லாததால் விளையாட்டு மைதானமாக காட்சி அளிக்கிறது.

குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களை பயன்படுத்தி கிராமப்புற கால்வாய்களை தூர்வார வேண்டும். நான்கு வழி சாலை அமைக்கும் பணியால் பல நீர்நிலைகள் அழிந்து வரும் சூழல் உருவாகி உள்ளது. சுசீந்திரம் குளத்தையொட்டியும், குமரி அணை பகுதியிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

அவற்றை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. அதனை உடனே சரி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசியதாவது:-

கால்வாய்களை தூர்வாருவது மற்றும் மணல் அள்ளுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் உள்ளதால் தூர்வாரும் பணி தாமதமாகிறது. சுசீந்திரம் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர்க்கசிவு இல்லை.

குமரி மாவட்டத்தில் வழக்கமாக 6,500 எக்டர் நிலப்பரப்பில் கன்னிப்பூ சாகுபடி நடைபெறும். ஆனால் இந்த முறை 3,214 எக்டர் நிலப் பரப்பில் பாசனம் நடக்கிறது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற குமரி மாவட்ட தாசில்தார்களிடம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே சில கேள்விகளை கேட்டார். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் குளங்களில் மணல் அள்ள அனுமதி கேட்ட விவசாயிகள் பற்றியும், அவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதுபற்றி கணக்கு அளிக்கும்படி கூறினார். ஆனால் சில தாசில்தார்கள் கலெக்டரின் கேள்விக்கு சரிவர பதில் அளிக்காமல் திணறினர்.

மேலும் நீர்நிலைகள் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றியும் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களிடம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்றும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறுகையில், மாத்தூர் தொட்டி பாலத்தில் நீர் கசிவு உள்ளதா? என நேரில் ஆய்வு செய்வதாக தெரிவித்தார். மேலும் சில விவசாயிகள் மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். சிலை வைப்பது பற்றி தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதற்கிடையே கூட்டத்தின் போது, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் உள்ள நீரை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அதிகாரிகள் அங்கிருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுக்கிறார்கள்.

இதனை அனுமதிக்கக்கூடாது என்று விவசாயிகள் கூறினர். இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story