நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம்: பொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு பேட்டி


நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம்: பொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு பேட்டி
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 8:43 PM GMT)

பொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும் என்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு தலைமையில் குமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர், குளச்சல் உதவி சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது குமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றி டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு கேட்டறிந்தார். பின்னர் வாரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுரைகள் வழங்கினார்.

பாரபட்சம் காட்டக்கூடாது

இதனையடுத்து டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு வடசேரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களிலேயே முதன்மையானதாக வடசேரி போலீஸ் நிலையம் திகழ்கிறது. இந்த போலீஸ் நிலையத்தை டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு பார்வையிட்டார். அப்போது சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் உடன் இருந்தார். இந்த போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்களை போலீஸ் நிலையத்தின் அருகே திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

பொதுமக்கள் பாராட்டு...

இதை கவனித்த டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, இருசக்கர வாகனங்களை நிறுத்த செட் அமைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நான் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக குமரி மாவட்டம் வந்துள்ளேன். இங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது எனக்கு தெரிந்த அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினேன். அவர்களும் சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் பாராட்டும்படி போலீசார் செயல்பட வேண்டும். வழக்குகளை உரிய முறையில் விசாரணை நடத்தி தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழக்குகள் விசாரணைக்கு பாரபட்சம் காட்டக்கூடாது“ என்றார். 

Next Story