ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 5:18 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அதற்கு தேவை யான உபகரணங்களை அப்பகுதிக்கு கொண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தினர். தற்போது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி கேட்டு ஓ.என்.ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் மனு அளித்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story