தாத்தாவுக்கு ஈமக்காரியம் செய்ய சென்றபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


தாத்தாவுக்கு ஈமக்காரியம் செய்ய சென்றபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 July 2019 10:30 PM GMT (Updated: 20 July 2019 5:41 PM GMT)

தாத்தாவுக்கு ஈமக்காரியம் செய்ய ஒகேனக்கல்லுக்கு சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

பென்னாகரம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது38). கூலித்தொழிலாளி இவருடைய தாத்தா கடந்த 3 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பெரியசாமி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 120 பேருடன் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஈமக்காரியம் செய்ய வந்தார்.

ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகில் ஈமக்காரியம் செய்த பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது திடீரென பெரியசாமி ஆற்றில் மூழ்கினார். இதை கண்ட உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் பெரியசாமி காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் பெரியசாமியின் உடலை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவருடைய உடல் மீட்கப்பட்டது. அப்போது கரையில் திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார், இறந்த பெரியசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தாவுக்கு ஈமக்காரியம் செய்ய ஒகேனக்கல்லுக்கு சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story