ஆத்தூர், ஓமலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆத்தூர், ஓமலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 10:00 PM GMT (Updated: 20 July 2019 7:59 PM GMT)

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆத்தூர், ஓமலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டு கொடுக்க மறுத்தனர். இதன் காரணமாக, அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நாராண்யூர் என்ற இடத்தில் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். உடனே அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரியங்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பழைய பஸ் நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் முகிலரசன் உள்பட பலர் கலந்த கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஓமலூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர் சக்திவேல், நகர தலைவர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலம், ரத்தினவேல், முரளி கேப் பாலன், மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகர், அய்யண்ணன், லட்சுமணன், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொழிலாளர் பிரிவு தலைவர் முருகசாமி நன்றி கூறினார்்.

Next Story