கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்; தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்; தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2019 10:30 PM GMT (Updated: 20 July 2019 8:01 PM GMT)

கொப்பரை தேங்காய்க்கான விலையை அரசு அறிவித்துள்ளதைவிட உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விருதுநகர்,

தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் விஜயமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் தமிழகத்தில் தான் 4 லட்சத்து 60 ஆயிரம் எக்டேரில் தென்னை விவசாயம் நடக்கிறது. கேரளாவில் தேங்காய் உற்பத்தி அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் தான் கேரளாவைவிட அதிக அளவு நிலபரப்பில் தென்னை விவசாயம் நடக்கிறது. ஆனால் கடும் வறட்சி காரணமாக தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் கருகி விட்டன. மேலும் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் தென்னை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சட்டமன்றத்தில் 20 மாவட்டங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பந்து கொப்பரை தேங்காய்க்கு கிலோ 1-க்கு ரூ.99.20 கொள்முதல் விலையாகவும், அரவை கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.95.21-ம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் டன் பந்து கொப்பரை தேங்காயும், 45 ஆயிரம் டன் அரவை கொப்பரையும் ஆக மொத்தம் 50 ஆயிரம் டன் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது தென்னை விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை ஐகோர்ட்டு கிளை கொப்பரை தேங்காய்க்கு கிலோவுக்கு ரூ.103 என நிர்ணயிக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் தனியார் நிறுவனங்கள் தென்னை விவசாயிகளிடம் இருந்து பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரையை கிலோ 1-க்கு ரூ.130 முதல் ரூ.140 வரை கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு கொப்பரை தேங்காய்க்கான விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காயில் இருந்து எண்ணெய் தயாரித்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யவோ அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடவோ செய்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும். மேலும் கேரளாவில் உரித்த தேங்காய் கிலோ ரூ.51-க்கு கொள்முதல் செய்வதை போல தமிழகத்திலும் கொள்முதல் செய்ய வேண்டும்.

கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் தமிழகத்திற்கு 9.38 சதவீதமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறட்சி பாதிப்பு அடைந்த தென்னை மரங்களை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மர விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story