பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2019 9:51 PM GMT (Updated: 20 July 2019 9:51 PM GMT)

சென்னை சைதாப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மகள் நிவேதிதா(வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நிவேதிதா, தான் படிக்கப்போவதாக கூறிவிட்டு அவரது அறைக்குள் சென்றார்.

சிறிதுநேரம் கழித்து அவரது பெற்றோர், சாப்பிடுவதற்காக நிவேதிதாவை அழைத்தனர். அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நிவேதிதாவின் பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நிவேதிதா, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சைதாப்பேட்டை போலீசார், நிவேதிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிவேதிதா, கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவேதனையில் அவர், தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story