போலீஸ், டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை


போலீஸ், டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 20 July 2019 10:20 PM GMT (Updated: 20 July 2019 10:20 PM GMT)

சென்னையில் போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

ஆலந்தூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த பார் உரிமையாளர் நெல்லையப்பன், கடந்த மே மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில், அப்போது மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சுப்புராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் சென்னையை அடுத்த பாலவாக்கம் வேம்புலிஅம்மன் கோவில் தெருவில் உள்ள டி.எஸ்.பி. சுப்புராஜ் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் உள்பட சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. குடியிருப்பில் வசித்துவரும் போலீஸ் ஏ.டி.எஸ்.பி. மாணிக்கவேல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது.

இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

20 இடங்களில்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளில் உரிமம் இல்லாமல் பார் நடத்துவதற்கு அதிகளவில் ‘டாஸ்மாக்’ அதிகாரிகள், போலீஸ் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிக்கையின்படி தமிழக அரசிடம் உரிய உத்தரவு பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேற்படி வழக்கில் தொடர்புடைய ‘டாஸ்மாக்’ அதிகாரிகள், போலீஸ் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய மொத்தம் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் நிரந்தர வைப்புத்தொகை ரசீதுகள், ரொக்கம், தங்கநகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story