பேராவூரணி பெரிய குளம் தூர்வாரும் பணி: இளைஞர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு


பேராவூரணி பெரிய குளம் தூர்வாரும் பணி: இளைஞர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 6:39 PM GMT)

பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள பெரியகுளம் 564 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பெரிய குளம் மண்மேடாகவும், புதர் மண்டியும் காட்சி அளித்தது. குளத்துக்கு நீர் வரும் பாதைகளும் அடைபட்டிருந்தன. இதனால் குளம் வறண்ட நிலையில் காட்சி அளித்தது.

பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பெரியகுளம், புதர் மண்டிய நிலையில் இருந்தது அப்பகுதி இளைஞர்களை வேதனைப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.

அதன்படி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற சங்கத்தை ஏற்படுத்திய இளைஞர்கள், பெரியகுளத்தை கடந்த 30 நாட்களாக தூர்வாரி வருகிறார்கள். 3 பொக்லின் எந்திரங்கள், 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலமாக தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் பெரிய குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. குளம் ஆழப்படுத்தப்பட்டு, கரையில் வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணி மேற்கொண்டு வருவது குறித்து தகவல் அறிந்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று பேராவூரணிக்கு வந்து பெரிய குளத்தை தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் குளக்கரையில் மரக்கன்றையும் நட்டார்.

அவரை கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தங்க கண்ணன், கார்த்திகேயன், நவீன், ஆனந்த், நிர்மல் உள்ளிட்டோர் வரவேற்று தூர்வாரும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது நீதிபதி, இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பேசியதாவது:- இளைஞர்கள் குளத்தை தூர்வாரும் முயற்சியை இடைவிடாமல் செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்க வேண்டாம். பலன் தானாகவே வந்தடையும்.

உங்கள் மூலம் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வேகமாக பரவும். மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு இளைஞனும் கையில் எடுத்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும். மழை காலத்துக்குள் குளத்தை தூர்வாரும் பணியை செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இளைஞர்கள் மூலமாக நடைபெறும் குளங்களை தூர்வாரும் பணியை பார்வையிடுவதற்காக நீதிபதி புறப்பட்டு சென்றார்.

Next Story