குடிமராமத்து பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது கலெக்டர் ஆனந்த் பேச்சு


குடிமராமத்து பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது கலெக்டர் ஆனந்த் பேச்சு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 6:44 PM GMT)

குடிமராமத்து பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து பாசனதாரர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 95 பணிகளை ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கிராமங்களில் விவசாயிகள் இடம் பெற்றுள்ள பாசனதாரர்கள் சங்கம் மூலம் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பாசன வாய்க்கால் மதகுகள் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிமராமத்து பணியின் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். விவசாயிகளின் பங்களிப்பு நிதியாகவோ, பொருளாகவோ அல்லது பணியாகவோ இருக்கலாம். அந்தந்த வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட பாசனதாரர்கள் சங்கத்தினால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் வேறு பாசனதாரர் சங்கத்தினால் இப்பணிகளை மேற்கொள்ள முடியாது.

திருவாருர் மாவட்டத்தில் பாசனதாரர்கள் சங்கங்கள் மூலம் மேற்கொண்டு வரும் குடிமராமத்து பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்து பணிகள் குறித்த சந்தேகங்களை தொடர்புடைய நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு அவ்வப்போது தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும்.

எனவே குடிமராமத்து திட்டத்தை முழுமையாக மேற்கொள்ள அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக பாசனதாரர் சங்கங்கள் எவ்வாறு வங்கி கணக்கு பராமரிப்பது, வரி தாக்கல் செய்வது உள்ளிட்டவைகள் குறித்த சந்தேகங்களுக்கு தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா, மாநில வரி அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story