திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் கோபுரத்தில் சாமி சிலைகள் பெயர்ந்து விழுந்தன பக்தர்கள் அதிர்ச்சி


திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் கோபுரத்தில் சாமி சிலைகள் பெயர்ந்து விழுந்தன பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 7:45 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் கோபுரத்தில் உள்ள சாமி சிலைகள் பெயர்ந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவில் தாழ்வான ஒரு குன்றை குடைந்து கட்டப்பட்டு உள்ளது. தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வ கோவிலாகும். இந்த கோவிலில் மன்னர் காலத்தில் தசரா பண்டிகையும், சித்திரை திருவிழாவும், ஆடிப்பூர திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. தற்போது சித்திரை திருவிழாவும், ஆடிப்பூர திருவிழாவும் நடைபெற்று வருகின்றன.

மன்னர் காலத்தில் இந்த கோவில் தேரோட்டம் நடைபெறும்போது திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதனை பின்பற்றி தற்போதும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட 4 கோபுரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது ராஜகோபுரத்தில் உள்ள ஒருசில சாமி சிலைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், இக்கோவிலை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து காணப்படுகிறது. வருகிற 25-ந் தேதி முதல் இக்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்குள் ராஜகோபுரத்தை சீரமைத்து சாமி சிலைகளை மீண்டும் நிறுவ வேண்டும் என்று கூறினர்.

Next Story