துறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரித்துக்கொலை? போலீசார் விசாரணை


துறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரித்துக்கொலை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2019 10:15 PM GMT (Updated: 21 July 2019 9:35 PM GMT)

துறையூர் அருகே வீட்டில் தூங்கிய வாலிபர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர்,

துறையூர் அருகே வேங்கடத்தானூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 32). இவர் மருவத்தூர் அருகே உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் குடித்துவிட்டு வேலைக்கு சென்றதால் அவரை தொழிற்சாலை நிர்வாகம் சமீபத்தில் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் வீட்டின் அருகே மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தன. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்தபோது, பிரபாகரனின் வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருந்தது.

வாலிபர் எரித்துக்கொலை?

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பிரபாகரன் கட்டிலில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் டி.வி., கட்டில் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டின் அருகே காலி மண்எண்ணெய் கேனும், தீப்பந்தமும் கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரன் மீது மர்ம நபர்கள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் போலீசார் விசாரணையில், பிரபாகரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் தனது உறவினரின் மூலம் பிரபாகரனை கண்டித்து தாக்கியதும் தெரியவந்தது. ஆனாலும் அவர்களின் தொடர்பு தொடர்ந்துள்ளது.

இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story