குடவாசல் அருகே வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுப்பு


குடவாசல் அருகே வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 6:42 PM GMT)

குடவாசல் அருகே வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கடமங்குடி கிராமத்தில் கன்னி வாய்க்காலை 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் சீரமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வாய்க்காலில் சில பெண்கள் மண் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏதோ ஒரு உலோகம் மண் வெட்டியில் பட்டு சத்தம் கேட்டது. இதையடுத்து பெண்கள் அந்த பகுதியை கவனமாக தோண்டினர்.

சிறிது ஆழம் தோண்டியபோது அங்கு உலோகத்தால் ஆன பாதங்கள் புதைந்து இருப்பது தெரிய வந்தது. அந்த பாதங்களை பெண்கள் கவனமாக வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர். மேலும் இதுகுறித்து பணிதள பொறுப்பாளர் வனிதா, ஊராட்சி செயலாளர் குமரன் ஆகியோருக்கு 100 நாள் திட்ட பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று உலோகத்தால் ஆன பாதங்களை கைப்பற்றி குடவாசல் தாசில்தார் ஜீவானந்தத்திடம் ஒப்படைத்தனர்.

பாதங்கள் ஒவ்வொன்றும் அரை அடி உயரம் இருந்தன. அவை சாமி சிலைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் உலோக பாதங்களாக இருக்கலாம் என்றும், ஐம்பொன்னால் ஆனதா? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story