காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 6:58 PM GMT)

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அருளேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஞானசேகர், பாலசுப்பிரமணியன், லல்லி, சகிலா, ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட தலைவர் அந்துவன் சேரல், செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு:-

கீழ்வேளூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கீழ்வேளூரில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். சத்துணவு உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர பயணப்படி ரூ.100 வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் மரியபிரகாசம் நன்றி கூறினார்.

Next Story