மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு


மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 7:09 PM GMT)

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த தாராசுரம் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் பலர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் காவிரி வடிநில கோட்டத்தின் கீழ் மணல் எடுக்கும் தளம் இயங்கி வந்தது. 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தினமும் அரசு நிர்ணயம் செய்த தொகையை செலுத்திவிட்டு மணல் எடுக்கும் தளத்தில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்துதொழில் செய்து பிழைத்து வந்தோம்.

எங்களுக்கு இந்த தொழிலை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. ஆனால் தற்போது மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. காலம், காலமாக அரசின் உத்தரவுகளை ஏற்று இந்த தொழில் செய்து வருகிறோம். இந்தநிலை தொடர்ந்தால் எங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும், மாடுகளையும் பராமரிப்பதில் சிரமம் ஏற்படும். மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு உரிமம் பெற்று தர வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மதுக்கடையை திறக்கக்கூடாது

தஞ்சை தொல்காப்பியர் நகர், பிரகதாம்பாள் நகர் இணைந்த நலசேவை இயக்கத்தினர் மற்றும் காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள், பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் அங்கு பார் வசதியுடன் கூடிய மதுக்கடை திறக்க உள்ளனர். இதன்காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

ஏற்கனவே இருக்கக்கூடிய 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலையில் புதிதாக மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடி, குடியை கெடுக்கும் என்பதால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பை மீறி மதுக்கடை திறப்பது சமுதாய பேரழிவை ஊக்குவிப்பதாகும்.

எனவே புதிதாக மதுக்கடை திறப்பதை தடுக்க வேண்டும். ஏற்கனவே செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story