அருப்புக்கோட்டை அருகே பிறந்த குழந்தையை இறந்ததாக கூறி கடத்திய பாட்டி கைது; உடந்தையாக இருந்த பெண் டாக்டர் உள்பட 3 பேரும் சிக்கினர்


அருப்புக்கோட்டை அருகே பிறந்த குழந்தையை இறந்ததாக கூறி கடத்திய பாட்டி கைது; உடந்தையாக இருந்த பெண் டாக்டர் உள்பட 3 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 7:29 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த ஆண் குழந்தையை இறந்ததாக கூறி கடத்திய பெண் டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது 28). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்போது கிராமத்துக்கு வேலை நிமித்தமாக சென்றிருந்தபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (வயது 19) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

சக்திமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சக்திமுருகனுடனான தொடர்பினால் ராஜலட்சுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தாமதமாக தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராஜலட்சுமியின் தாயார் முத்துலெட்சுமி ராஜலட்சுமியை அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் அந்தக் குழந்தை இறந்து பிறந்ததாக ராஜலட்சுமியை ஏமாற்றிய முத்துலெட்சுமி அந்த குழந்தையை ஆஸ்பத்திரி ஊழியர் குழந்தை (60) என்பவர் மூலம் அருப்புக்கோட்டை மணிநகரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (39), அவரது மனைவி சண்முகப்பிரியா (37) ஆகியோரிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் ராஜலட்சுமி சக்திமுருகனை தொடர்பு கொண்டு அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினார். அப்போது முத்துலட்சுமி, ராஜலட்சுமியிடம் உனது குழந்தை இறந்து பிறக்க வில்லை என்றும், அந்த குழந்தையை அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவரிடம் ஒப்படைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த தகவல் தெரிய வந்ததும் சக்திமுருகனும், ராஜலட்சுமியும் அருப்புக்கோட்டை ஜெயராஜ் தம்பதியரிடம் குழந்தையை திருப்பித் தருமாறு கேட்டனர். அதற்கு ஜெயராஜ் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜலட்சுமி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தனது குழந்தையை மீட்டுத் தருமாறு மனு கொடுத்தார். நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், அவர் இது குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையை கடத்துவதற்கு கல்லூரணி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் வினோ தமயந்தி (49), அவரது கணவர் சித்த மருத்துவர் வடிவேல் முருகன் (51), ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் போலீசார் டாக்டர் வினோ தமயந்தி, அவரது கணவர் வடிவேல்முருகன், முத்துலெட்சுமி, ஆஸ்பத்திரி ஊழியர் குழந்தை மற்றும் ஜெயராஜ், அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் டாக்டர் வினோ தமயந்தி, அவரது கணவர் வடிவேல்முருகன், ஜெயராஜ், சண்முகப்பிரியா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Next Story