ரேஷன் கார்டுகளுக்கு அரிசி குறைப்பு; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்


ரேஷன் கார்டுகளுக்கு அரிசி குறைப்பு; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்
x
தினத்தந்தி 22 July 2019 10:30 PM GMT (Updated: 22 July 2019 10:13 PM GMT)

ரேஷன் கார்டுகளுக்கு திடீரென அரிசி குறைப்புக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருங்கல்,

தமிழகத்தில் தற்போது பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 5 விதமான குறியீடுகள் கொண்ட மின்னணு ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த குறியீட்டில் பி.எச்.எச்., என்.பி.எச்.எச். ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நபர் 1-க்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இது போல் பி.எச்.எச். (ஏஏஒய்) ரேஷன் கார்டுக்கு 35 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் முதல் என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட ரேஷன் கார்டுகளுக்கு திடீரென்று மொத்தம் 20 கிலோ அரிசி என்று எந்தவிதமான அறிவிப்போ அல்லது எந்த அரசு ஆணையோ இல்லாமல் வழங்கப்படுகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் ஏற்கனவே அளித்த மனுக்களின் அடிப்படையில் ஆய்வு செய்து பி.எச்.எச். ரேஷன் கார்டுகள் பெற தகுதி வாய்ந்த என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட கார்டுகளை பி.எச்.எச். குறியீடு கார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட ரேஷன் கார்டுதாரர்கள் இதுவரை பெற்று வந்த அளவில் அரிசி உள்பட பொருட்களை உடனடியாக தொடர்ந்து வழங்க வேண்டும்.

உள்ளிருப்பு போராட்டம்

தவறும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது (ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.) தலைமையில் பாதிக்கப்பட்ட பொது மக்களை திரட்டி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலும், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story