நெல்லை அருகே பட்டப்பகலில் 4 வீடுகளை உடைத்து நகை- பணம் கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை


நெல்லை அருகே பட்டப்பகலில் 4 வீடுகளை உடைத்து நகை- பணம் கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 10:07 PM GMT)

நெல்லை அருகே பட்டப்பகலில் 4 வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகே விரிவாக்கப் பகுதியில் வ.உ.சி.நகர், குமரன் காலனி, ஜான்சி நகர் உள்ளிட்ட நகர்கள் உள்ளன. இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் அடுத்தடுத்து உள்ள 4 வீடுகளின் முன்பக்க கதவு நேற்று மாலையில் உடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் அரியகுளம் சாரதா நகரிலுள்ள ஒரு வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீடுகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

ஒரு வீட்டில் 1½ பவுன் நகையும், மற்றொரு வீட்டில் 1½ பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்து. மொத்தம் 3 பவுன் நகையும், வீடுகளில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. சாரதா நகர் வீட்டில் பணம், நகை இல்லாததால், கொள்ளை போகவில்லை. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்தனர். அவர்கள் வீடுகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆள் இல்லாத வீட்டையும், காலையில் வேலைக்கு சென்று இரவு வருபவர்களின் வீடுகளையும் நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

முன்னாள் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கடந்த 23-ந் தேதி குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெல்லை அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்துள்ள வீடுகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story