3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டத்திற்கு எதிரானது ; பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பேட்டி


3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சட்டத்திற்கு எதிரானது ; பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
x
தினத்தந்தி 25 July 2019 11:17 PM GMT (Updated: 25 July 2019 11:17 PM GMT)

3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.

பெங்களூரு, 

3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான சங்கர், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகிய 3 பேரை தகுதி நீக்கம் செய்து நேற்று சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக டெல்லியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள் ஜெகதீஷ் ஷெட்டர், மாதுசாமி ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது சரியல்ல. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது. தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து அவர்கள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம். 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து இருப்பதன் மூலம் ராஜினாமா செய்து உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களை மிரட்டும் செயலில் சபாநாயகர் ரமேஷ் குமார் ஈடுபட்டு உள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்று(அதாவது நேற்று) காலை, கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினோம். மறுபடியும் அவரை சந்தித்து பேச முடியவில்லை. நாளை(இன்று) அவரை மீண்டும் சந்தித்து, 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கம், மற்ற எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தின் மீது அவர் என்ன முடிவு எடுப்பார்? மேலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story