விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்


விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2019 10:15 PM GMT (Updated: 26 July 2019 10:02 PM GMT)

விலையில்லா மடிக் கணினி வழங்கக்கோரி கீரமங்கலத்தில் முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீரமங்கலம், 

கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்து முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஊரிலும் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கும் விலையில்லா மடிக் கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18-ம் கல்வி ஆண்டில் படித்தவர்கள், தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று காலை கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளும், முன்னாள் மாணவர்களிடம் செல் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், எங்களுக்கு மடிக் கணினி கொடுக்காமல் தற் போதைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. எங்களுக்கும் உடனடியாக மடிக்கணினி கொடுக்க வேண்டும். எங்களுக்கு மடிக் கணினி கிடைக்கவில்லை என்றால், வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் ஆலங்குடி தொகுதி முழுவதும் எங்களைப்போல் பாதிக்கப்பட்ட மாணவர்களை திரட்டி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம், என்றனர்.

Next Story