தகுதி நீக்கத்தை கண்டு பயப்பட போவதில்லை - அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் சொல்கிறார்


தகுதி நீக்கத்தை கண்டு பயப்பட போவதில்லை  - அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் சொல்கிறார்
x
தினத்தந்தி 26 July 2019 10:47 PM GMT (Updated: 26 July 2019 10:47 PM GMT)

தகுதி நீக்கத்தை கண்டு பயப்பட போவதில்லை என்றும், ராஜினாமாவை திரும்ப வாங்கமாட்டோம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றதாலும் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆர்.சங்கர் ஆகிய 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் 3 பேரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆர்.சங்கரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி மும்பையில் தங்கியுள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் வந்தது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 3 பேரும் கோர்ட்டுக்கு செல்வார்கள். கோர்ட்டில் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

எங்களை மிரட்டுவதற்காக 3 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ராஜினாமாவை திரும்ப வாங்கமாட்டோம். தகுதி நீக்கத்தை கண்டும் பயப்பட போவதில்லை. எங்களது ராஜினாமாவை விரைவில் சபாநாயகர் அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மும்பையில் இருந்து இன்னும் 3 நாட்களில் பெங்களூருவுக்கு திரும்ப முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார். 

Next Story