சென்னையை தொடர்ந்து திருச்சியிலும் பயங்கரம்: என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் மோதல் மண்டை உடைப்பு; 10 பேர் காயம்


சென்னையை தொடர்ந்து திருச்சியிலும் பயங்கரம்: என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் மோதல் மண்டை உடைப்பு; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 27 July 2019 11:15 PM GMT (Updated: 27 July 2019 7:37 PM GMT)

சென்னையை தொடர்ந்து திருச்சியிலும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் மண்டை உடைந்தது. 10 பேர் காயமடைந்தனர்.

திருச்சி,

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் தொடர்பாக பஸ்சில் ‘ரூட் தல’யாக செயல்பட்டவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையை தொடர்ந்து திருச்சியில் நேற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சீனியர்-ஜூனியர் மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி பிராட்டியூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்கள் சிலர், வளாகத்தில் மாணவிகள் செல்லும் போது கிண்டல் செய்வார்களாம். இதனை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர். மேலும் மாணவிகளை கிண்டல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் ஜூனியர் மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மோதல்

இந்த நிலையில் நேற்று பகலிலும் 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டனர். இதனை 4-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் தட்டிக்கேட்டனர். அதன்பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து மைதானத்திற்கு சென்றனர். அப்போது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் மைதானத்திற்குள் சென்று அங்கு நின்ற 4-ம் ஆண்டு மாணவர்களிடம் எதிர்த்து பேசினர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.

மேலும் அங்கு கிடந்த கம்புகள், கட்டைகளால் தாக்கினர். இந்த தாக்குதலில் இரு தரப்பினருக்கும் ஆதரவாக சக மாணவர்கள் களத்தில் புகுந்தனர். மாணவர்கள் மோதிக்கொண்டே மைதானத்தில் இருந்து வளாகத்திற்கு வந்தனர். பாட்டில்களையும் தூக்கி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தினால் கல்லூரி வளாகமே களேபரமானது. சக மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

27 பேரிடம் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 27 மாணவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் நிக்சன் விசாரணை நடத்தினார். இந்த மோதல் சம்பவத்தில் 6 மாணவர்களின் மண்டை உடைந்தது. மேலும் 4 பேருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. காயம் அடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தற்போது வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சீனியர், ஜூனியர் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story