போரிவிலியில் கடைகளில் திருடி வந்த தாய்-மகள் கைது


போரிவிலியில் கடைகளில் திருடி வந்த தாய்-மகள் கைது
x
தினத்தந்தி 27 July 2019 11:35 PM GMT (Updated: 27 July 2019 11:35 PM GMT)

போரிவிலியில் கடைகளில் திருடி வந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் திருடிய கடைக்கு மீண்டும் சென்றபோது சிக்கினார்கள்.

மும்பை,

மும்பை போரிவிலி மேற்கு பகுதியில் லங்கேஸ் வைபவ் சக்பால் என்பவருக்கு சொந்தமான கண்ணாடி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு கடந்த மாதம் வாடிக்கையாளர் போல 2 பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் கடைஊழியரின் கவனத்தை திசை திருப்பி விலை உயர்ந்த கண்ணாடிகளை திருடி சென்றனர்.

கண்ணாடிகள் காணாமல் போனதை பார்த்த உரிமையாளர் லங்கேஸ் வைபவ் சக்பால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அந்த 2 பெண்கள் தான் கண்ணாடிகளை திருடி சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது கடைக்கு அதே 2 பெண்கள் மீண்டும் வந்தனர். இதை பார்த்த கடை ஊழியர்கள் 2 பெண்களையும் பிடித்து போரிவிலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தகிசரை சேர்ந்த ஹர்ஜித் கவுர் (வயது 62) மற்றும் இவரது மகள் சுவிட்டி கவுர் (32) என்பது தெரியவந்தது. இருவரும் பல்வேறு கடைகளில் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி பொருட்களை திருடி வந்தது தொியவந்தது.

போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நாளை (திங்கட்கிழமை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story