திருவள்ளூர் மாவட்டத்தில் 1,112 குளங்கள் விரைவில் ஆழப்படுத்தப்படும் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 1,112 குளங்கள் விரைவில் ஆழப்படுத்தப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 July 2019 10:15 PM GMT (Updated: 28 July 2019 5:14 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,112 குளங்கள் விரைவில் ஆழப்படுத்தப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி,

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பராமரிக்கப்படும் ஏரிகள், குளங்கள், நீரோடைகளில் குடிமராமத்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி விரைந்து பணிகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் ஏரிகள், குளங்கள், நீரோடைகள், கால்வாய்கள் உள்பட பலவகை நீர் ஆதாரங்கள் கணக்கெடுப்பின்படி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக ஆலோசனை கூட்டத்தில் கேட்டறிந்தார்.

இதையடுத்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்த கூடுவாஞ்சேரி ஊராட்சியில் அடங்கிய பரிக்குப்பட்டு ஏரியில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் 190 ஏரிகள், 1,112 குளங்கள் விரைவில் ஆழப்படுத்தப்படும். கரைகள் செப்பனிடுதல், புதிதாக மதகுகள் அமைத்தல் போன்ற பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, முதன்மை பொறியாளர் தணிகாசலம், பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் எட்வர்ட்வில்சன், துணை தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், ஊராட்சி செயலாளர்கள் ராஜேஷ்கண்ணா, தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story