திருவள்ளூரில் பயன்பாடின்றி கிடக்கும் தாய், சேய் நல மைய கட்டிடம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருவள்ளூரில் பயன்பாடின்றி கிடக்கும் தாய், சேய் நல மைய கட்டிடம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2019 10:15 PM GMT (Updated: 28 July 2019 5:30 PM GMT)

திருவள்ளூரில் தாய், சேய் நல மைய கட்டிடம் பயன்பாடின்றி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே ராஜாம்மாள் தேவி பூங்கா உள்ளது. இங்கு பூங்கா இடத்தில் கடந்த 2012-13-ம் ஆண்டில் அப்போதைய திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.ரமணா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் செலவில் தாய், சேய் நல மைய கட்டிடம் பொதுமக்களின் நலனுக்காக கட்டப்பட்டது. இந்த மையம் மூலம் திருவள்ளூர், பெரும்பாக்கம், டோல்கேட், காவலர் குடியிருப்பு, நேதாஜி சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தாய், சேய் நல மையம் செயல்படாமல் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது.

இதனால் முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். தாய், சேய் நல மையம் பூட்டி கிடப்பதால் அந்த கட்டிடத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கட்டிடத்தை சுற்றி முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த தாய், சேய் நல மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story