அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 7:39 PM GMT)

அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே, தாஞ்சூர், கரையப்பட்டி, இசுகுபட்டி ஆகிய 3 கிராம மக்கள் சேர்ந்து சித்தி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு திருவிழா நடத்தினர். இதை முன்னிட்டு 48-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் தாஞ்சி கண்மாயில் நடத்தப்பட்டது. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 63 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பந்தயத்திற்கு போய் வர 12 கி.மீ. தூரமும், நடுமாடு போய்வர 9 கி.மீ. தூரமும், சிறிய மாடு போய்வர 7½ கி.மீ. தூரமாகவும் போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் முதல் பரிசை எஸ்.பி. பட்டணம் தமிம் மாட்டு வண்டியும், 2-வது பரிசை ஓணாங்குடி அரங்க நினைவாக முருகன் மாட்டு வண்டியும், 3-வது பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா மாட்டு வண்டியும், 4-வது பரிசை கே.புதுப்பட்டி அருண் அய்யனார் மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

தொடர்ந்து நடுமாடு பிரிவில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், முதல் பரிசை தட்டாக்குடி முத்துமாரி கருப்பையா மாட்டு வண்டியும், 2-வது பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் மாட்டு வண்டியும், 3-வது பரிசை அவணியாபுரம் மோகன்சாமிகுமார் மாட்டு வண்டியும், 4-வது பரிசை மதகுபட்டி கண்மதிஷா மாட்டு வண்டியும் பெற்றன.

சிறியமாடு பிரிவில் 29 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் முதல் பரிசை தல்லாம்பட்டி ஓம்பிரியா மாட்டு வண்டியும், 2-வது பரிசை கப்பலூர் முத்து மாட்டு வண்டியும், 3-வது பரிசை இடையாத்திமங்களம் விஜய்ராசு மாட்டு வண்டியும், 4-வது பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா மாட்டு வண்டியும் பெற்றன. இதை தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற தாஞ்சூர்-ஏம்பல் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். 

Next Story