திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x
தினத்தந்தி 29 July 2019 10:45 PM GMT (Updated: 29 July 2019 5:09 PM GMT)

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

இதில் பொதுமக்களிடம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும், மாற்றுத் திறனாளிகளிடம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.

அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மக்கள் குறை தீர்வு நாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரபாக காணப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story