விஜயகாந்த் மீதான வழக்கு மீண்டும் தஞ்சைக்கு மாற்றம் அடுத்த மாதம் 30-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு


விஜயகாந்த் மீதான வழக்கு மீண்டும் தஞ்சைக்கு மாற்றம் அடுத்த மாதம் 30-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 29 July 2019 11:15 PM GMT (Updated: 29 July 2019 7:12 PM GMT)

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதான வழக்கு மீண்டும் தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் நடந்த தே.மு.தி.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் கபிஸ்தலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறு பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதையடுத்து இந்த வழக்குகள் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தஞ்சைக்கு மாற்றம்

இந்த நிலையில் இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த வழக்குகள் மீண்டும் தஞ்சைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்குகள் நேற்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்த்துக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டதால் அவர் ஆஜராகவில்லை.

பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதி சிவஞானம் விசாரித்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Next Story