என்ஜினீயரிங் கல்லூரியில் மோதல் சம்பவம்: கைதான 28 மாணவர்களில் 2 பேருக்கு ஜாமீன்


என்ஜினீயரிங் கல்லூரியில் மோதல் சம்பவம்: கைதான 28 மாணவர்களில் 2 பேருக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 29 July 2019 10:15 PM GMT (Updated: 29 July 2019 7:31 PM GMT)

திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரியில் மோதல் சம்பவத்தில் கைதான 28 மாணவர்களில் 2 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.

திருச்சி,

திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் என்ஜினீயரிங் மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே கடந்த 27-ந் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் சரமாரி தாக்கிக்கொண்டனர். கம்புகள், கட்டைகள், பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் இரு தரப்பு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 28 மாணவர்களை கைது செய்து நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வருகிற 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். சிறையில் இருதரப்பு மாணவர்களும் வெவ்வேறு பிளாக்கில் அடைக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தரப்பில் தெரிவித்தனர். அங்கும் மாணவர்களை சிறைக்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கைதானவர்களில் திருச்சியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் நவீன் (வயது 19), 4-ம் ஆண்டு மாணவர் சரத்குமார் (21) ஆகியோர் தரப்பில் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2-ல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் 2 பேருக்கும் நேற்று ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மற்ற மாணவர்கள் தரப்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக மாணவர்கள் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story