மேல்மலையனூர் அருகே, ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல் - டிரைவர் பலி, கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்


மேல்மலையனூர் அருகே, ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல் - டிரைவர் பலி, கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 July 2019 10:45 PM GMT (Updated: 29 July 2019 7:34 PM GMT)

மேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூரை சேர்ந்தவர் சேட்டு மகன் முன்னாபேக்(வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை செஞ்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான மேல்மலையனூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(19), சுரேஷ்(19), சதீஷ்(19), ஜீவா(19) ஆகியோரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செஞ்சிக்கு புறப்பட்டார். ஆட்டோ மேல்மலையனூர் அடுத்த கன்னலம் வீரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்இமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் முன்னாபேக் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோவில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஞானோதயம் கிராமத்தை சேர்ந்த மல்லியப்பன்(40), குமார்(40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், மல்லியப்பன், குமார் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்ச்செல்வன், சதீஷ், ஜீவா ஆகியோருக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் பலியான முன்னாபேக் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story