நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு


நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 3:21 PM GMT)

நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பல்சமய நண்பர்கள் இயக்கம் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நடந்தது. பேரணியில் நாகர்கோவிலில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பேரணியானது ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன் இருந்து தொடங்கியது. பின்னர் பால் பண்ணை, டெரிக் சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியை சி.எஸ்.ஐ. பி‌ஷப் செல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சி.எஸ்.ஐ. பேராய செயலாளர் பைஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மனு

இதைத் தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இங்கு பெரும்பாலான மக்கள் உழைக்கும் பணத்தை போதைக்காக செலவு செய்யும் போக்கு அதிகமாக உள்ளது. இதனால் பல குடும்பங்கள் நிர்கதியாகி உள்ளன. பிள்ளைகளை படிக்க வைக்க இயலாமல் பல குடும்பங்கள் அழிந்துள்ளன. மது போதைக்கு அடிமையாகி பல இளைஞர்கள் இறந்துள்ளனர். பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் வழியில் மதுக்கடைகள் இருப்பதால் மாணவ–மாணவிகள் சிரமம் அடைகிறார்கள். இதன் காரணமாக குமரி மாவட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மது இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story