மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி


மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 3:44 PM GMT)

புதுக்கடை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே அனந்தமங்கலம், சுண்டவிளையை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37), கொத்தனார். மேலும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் இருந்தார். இவர் சம்பவத்தன்று அம்பாள்நகர் பகுதியில் வேலைக்கு சென்றார். அங்கு கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது கீழே கிடந்த கம்பியை மேலே தூக்கினார். அப்போது, எதிர்பாராத விதமாக கம்பி மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி மீது உரசியது. இதில், ஆனந்தராஜ் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து, தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, புதுக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த ஆனந்தராஜூக்கு அனுஜா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story