மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 7:24 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், தா.பழூர் ரோடு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியின் தெருமுனை பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

இன்றைய பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வி அமைப்பை முற்றிலுமாக மாற்றி புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயல்கிறது. அவ்வாறு உருவாகும் புதிய அமைப்பு இந்திய சமூகச்சூழலை கணக்கில் எடுக்காமல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பன்னாட்டு நிதி மூலத்தின் தேவைக்காக பாடத்திட்டம் மற்றும் படிக்கும் கால அளவை நீட்டிக்கிறது. தற்போது உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பள்ளி கல்வி முறையும், அதன்பின் மூன்று ஆண்டு கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு என்று உள்ள நிலையை மாற்றி அனைத்து பட்டப்படிப்பும் 4 ஆண்டுகள் வரை பயிலும் நிலையை உருவாக்குகிறது. இதனை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், அண்ணா சிலை, நால் ரோடு, காந்தி பூங்கா, தா.பழூர் ரோடு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியின் தெருமுனை பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்துச்சாமி, பல்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி பத்மாவதி நன்றி கூறினார். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பொதுமக்கள், மாணவ- மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. 

Next Story